பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு ஒன்றியம் அத்திமாஞ்சேரி காலனியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.9.40 லட்சம் மதிப்பீட்டில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அனைத்து வசதிகளுடன் அங்கன்வாடி மைய புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. ஆனால் 4 ஆண்டுகளாக இந்த கட்டிடத்தை திறக்க நடவடிக்கை எடுக்காத நிலையில் கட்டிடத்தைச் சுற்றி செடி கொடிகள், முட்புதர்கள் வளர்ந்து புதிய கட்டிடம் வீணாகி வருகிறது. இதனால் அங்குள்ள பழுதடைந்துள்ள கிராம சேவை மையத்தில் அங்கன்வாடி மையம் செயல்படுகிறது. பாதுகாப்பற்ற கட்டிடத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் சத்துணவு சமைக்க இடம், கழிப்பறை வசதி இல்லாததால் குழந்தைகள் அவதி அடைந்து வருகின்றனர்.
இதேபோல் கொடிவலசா காலனியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.11.78 லட்சம் மதிப்பீட்டில் சமையல் அறை, கழிப்பறை வசதி உள்ளிட்ட வசதிகளுடன் அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டப்பட்டது. அக்கட்டியம் 3 ஆண்டுகளாக திறக்கப்படாமல் மூடி வைக்கப்பட்டுள்ளதால், அங்கன்வாடி மையத்தில் படிக்கும் 25 குழந்தைகள் அங்குள்ள வாடகை கட்டிடத்தில் அமர்ந்து படித்து வருகின்றனர். குறைந்தபட்ச வசதிகளும் இல்லாத வாடகை வீட்டில் குழந்தைகள் அமர்ந்து படிக்க காற்றோட்டம் இல்லாததால் அவதி அடைந்து வருவதாக கிராமமக்கள் வேதனை தெரிவித்தனர். எனவே கட்டி முடிக்கப்படு திறக்கபப்டாமல் உள்ள அங்கன்வாடி மையத்தை திறக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.