சென்னை: மாவட்ட தலைவர், மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் தேர்தல் கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி: பாஜ மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிகரமாக இருக்கும் விதமாக என்ன என்ன விஷயங்களை கவனம் கொடுத்து செய்ய வேண்டும் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. தலைவர் அண்ணாமலை இந்நிகழ்ச்சியில் வழிகாட்டி இருக்கிறார். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜ ஒரு வெற்றிகரமான அடியை எடுத்து வைக்க வேண்டும். 3வது முறையும் மோடி பிரதமராக பொறுப்பேற்க வேண்டும்.
நாடாளுமன்ற தேர்தல் வரை ஏழு மாத காலம் அதற்கு உண்டான பணிகள், வழிகாட்டுதல்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதன் அடிப்படையில் வருகிற தேர்தலை சந்திப்பதற்கு பாஜவை சேர்ந்த அனைவரும் முழு மூச்சோடு முழு வேகத்தோடு ஈடுபாட்டோடு களம் இறங்கி பணி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநில தலைவருக்கு சிறிது உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதால் அவர் செய்தியாளர்களை சந்திக்கவில்லை. கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணி ஏற்கனவே இருக்கிறது. அதை பற்றி பேசப்பட்டது.
பாஜவை பொறுத்தவரை நாடாளுமன்ற தேர்தல் 2024ல் வரவேண்டும். அதற்கு முன்னால் ஐந்து மாநிலங்களில் தேர்தல்களையும் கவனம் கொடுக்க வேண்டிய கட்டாய நிலையில் பாஜ இருக்கிறது. ஆகையால் இந்த கூட்டம் வைக்கப்பட்டது. அதிமுகவில் இருந்து வெளியே வந்தது பின்னடைவு என்று நாங்கள் பார்க்கவில்லை. நாங்கள் எங்களது வலிமை குறித்து அதற்கான வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறோம். தேசிய ஜனநாயக கூட்டணியை எவ்வாறு வெற்றி பெற வேண்டும் என்பதுதான் இந்த கூட்டத்தின் நோக்கமே தவிர மற்ற கட்சிகள் குறித்து பேசுவதற்கு இந்த கூட்டம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.