சென்னை: தமிழகத்தில் 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: வடமேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, வடக்கு திசையில் நகர்ந்து நேற்று காலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேற்கு வங்கம் கடலோர பகுதிகளில் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டது.
குறிப்பாக சாகர் தீவுகளுக்கு தென் கிழக்கே சுமார் 60 கிமீ தொலைவிலும், டிகாவுக்கு தென் கி=ழக்கே சுமார் 110 கிமீ தொலைவிலும், கேபுபாராவுக்கு மேற்கே சுமார் 180 கிமீ தொலைவிலும் நிலை ெகாண்டது. இந்த ஆழ்ந்த தாழ்வு மண்டலம் விரைவாக நகரும் தன்மை கொண்டதாக இருந்ததால், நேற்று மாலையில் சாகர் தீவு-கேபுபாராவுக்கும் இடையில் கரையை கடந்தது.
இதுதவிர தமிழகத்தின் மேற்கு திசையில் இருந்து வீசும் காற்று காரணமாக நீலகிரி, கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கன முதல் அதி கனமழை பெய்யும் என்ற வாய்ப்பு இருந்ததால், அந்த பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டது. மேலும் திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப் பகுதிகள், தேனி, தென்காசி, மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் நேற்று பெய்தது.
அதன் தொடர்ச்சியாக இன்றும் நீலகிரி, கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஒருசில இடங்களிலும் தேனி, தென்காசி, திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப் பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யும் வாய்ப்புள்ளது. இதையடுத்து இந்த பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது. இந்த மழை ஜூன் 4ம் தேதி வரை நீடிக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.