Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

பரமக்குடி பஸ் ஸ்டாண்டில் இருக்கை வசதியின்றி பயணிகள் அவதி

பரமக்குடி, ஜூலை 30: ராமநாதபுரம் மாவட்டத்தின் முக்கிய போக்குவரத்து மையமாக விளங்கும் பரமக்குடி பஸ் ஸ்டாண்டில், பொதுமக்கள் மற்றும் பயணிகள் அமர்ந்து காத்திருக்க போதிய இட வசதிகள் இல்லை. இதனால் நீண்டநேரம் நடைபாதையிலேயே அமர்ந்து காத்திருக்கும் அவலம் தொடர்கிறது. அதிலும் பெண்கள், முதியவர்கள், குழந்தைகளுடன் வரும் பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். பஸ் ஸ்டாண்டில் உள்ள காத்திருப்பு இடங்களில் இருக்கைகள் போதிய அளவில் இல்லாததால், பயணிகள் நடைபாதை ஓரங்களில் வெயில் மற்றும் மழை காலங்களில் வரிசையாக அமர்ந்து பேருந்துகளுக்காக நீண்ட நேரம் காத்து கிடக்கின்றனர்.

இதனால் போக்குவரத்திற்கும், நடந்து செல்லும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுகிறது. பஸ் ஸ்டாண்ட் சுற்றுப்பகுதிகளில், நடைபாதைகளை முழுமையாக ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் நடந்து செல்ல வேண்டிய பாதையில் பொதுமக்கள் அமர வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. கடைகள், தள்ளு வண்டிகள், வியாபாரிகள் என நடைபாதை முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதால், பயணிகள் சாலையோரமாகவும், பேருந்துகள் நிற்கும் இடங்களிலும் அமர்ந்து காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகளுடன் வரும் பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர்.

பரமக்குடி பஸ் ஸ்டாண்டில் பயணிகள் காத்திருக்கும் இடங்களில் போதிய நிழல், இருக்கை வசதி இல்லாததால், வெயில் காலங்களில் கடும் வெப்பத்தையும், மழை காலங்களில் நனைந்த படியும் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. தூசி, வாகன மாசு ஆகியவற்றால் உடல் நலம் பாதிக்கப்படுவதாக பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர். பெரும்பாலும் பெண்கள் மற்றும் முதியவர்கள் நடைபாதையில் அமர்ந்து காத்திருப்பது குறிப்பிடத்தக்கது. சிலர் சாலையின் ஓரத்தில் அமர்வதால், வாகனங்கள் அருகில் சென்று விபத்து அபாயமும் அதிகரித்துள்ளது. பஸ் ஸ்டாண்ட் என்றால் குறைந்தபட்சம் அமர இடம் இருக்க வேண்டும். ஆனால் இங்கே தரையில் தான் இடம் என்று பெண்கள் கூறுகின்றனர். பரமக்குடி அண்ணா பேருந்து நிலையத்தை முழுமையாக கண்காணித்து மக்கள் தேவையை அறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது ஆணையாளரின் பொறுப்பாகும்.

அப்படி இருக்க, போதிய இருக்கைகள் இல்லாமை நடைபாதை ஆக்கிரமிப்புகள் பயணிகள் பாதுகாப்பு குறைவு ஆகியவை தொடர்ந்து நிலவுவது அதிகாரிகளின் அலட்சியத்தை வெளிப்படுத்துவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். பஸ் ஸ்டாண்டில் கூடுதல் இருக்கைகள் அமைக்க வேண்டும். நடைபாதை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும். பெண்கள், முதியவர்களுக்கு தனி காத்திருப்பு வசதி ஏற்படுத்த வேண்டும் என்பது பயணிகளின் ஒட்டுமொத்த கோரிக்கையாக உள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி ஆணையாளர் ஆய்வு செய்து பயணிகள் நடந்து செல்லும் பாதையை ஆக்கிரமித்துள்ள கடைகளை உடனடியாக அகற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.