விருதுநகர், ஜூன் 29: விருதுநகர் மாவட்டத்தில் 1,137 மையங்களில் அமைக்கப்பட்டுள்ள முகாம்கள் மூலம் 1.33 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ மருந்து வழங்கப்படுவதாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி தெரிவித்தார். விருதுநகர் நகராட்சி நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணியை அமைச்சர் ஜெகதீஸ்வரி தொடங்கி வைத்தார். அப்போது விருதுநகர் எம்எல்ஏ செல்வம் உடனிருந்தார்.
அப்போது அமைச்சர் ஜெகதீஸ்வரி கூறியதாவது: விருதுநகர் மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் மற்றும் சமுதாயக் கூடங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் என 1,137 மையங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் என 4,580 பணியாளர்கள் மூலம் 1,33,475 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. மேலும், 74 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டு, இலங்கைத் தமிழர் குடியிருப்பு பகுதிகள், நரிக்குறவர்கள் மற்றும் தற்காலிக குடியிருப்பு பகுதிகளில் வசிக்கின்ற குழந்தைகளுக்கும் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தினை செலுத்தி, நோய்த் தொற்றிலிருந்து பாதுகாத்து ஊனமில்லாத சமுதாயத்தினை உருவாக்கிட வேண்டும் என்றார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆனந்தி, மாவட்ட சுகாதார அலுவலர் யாசோதா மணி, வட்டார மருத்துவ அலுவலர் ஆரோக்கிய ரூபன்ராஜ் உட்பட மருத்துவ அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
