விருதுநகர், ஜூன் 29: தமிழக காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக மாணிக்கம் தாகூர் எம்பி நியமனம் செய்யப்பட்டுள்யளார். இதனை வரவேற்று விருதுநகரில் காங்கிரஸ் கட்சியினர் ஊர்வலமாக சென்று, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக செல்வப் பெருந்தகை இருந்து வந்தார். இந்நிலையில் அவர் மாற்றம் செய்யப்பட்டு, புதிய மாநிலத் தலைவராக விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் நியமனம் செய்யப்பட்டார். இதனை காங்கிரஸ் கட்சியினர் வரவேற்று, நேற்று விருதுநகரில் ஊர்வலமாக சென்று பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். இதன்படி விருதுநகர் நகராட்சி முன்பு தொடங்கிய ஊர்வலம் பஜார் தேசபந்து மைதானம், பழைய பேருந்து நிலையம், மணிக்கூண்டு வரை சென்றது.
முடிவில் அங்கிருந்த காமராஜர் சிலைக்கு காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். இதில் காங்கிரஸ் கட்சியின் கிழக்கு மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி, நகரத் தலைவர் நாகேந்திரன், வடக்கு வட்டார தலைவர் சரவணன், மாநில பொதுக்குழு உறுப்பினரும், விருதுநகர் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளருமான பாலகிருஷ்ணன் சாமி, நகராட்சி கவுன்சிலர்கள் செல்வரத்தினா திலக், பால்பாண்டி, ரம்யா, பேபி காளிராஜன், சித்தேஸ்வரி, மாலதி சுந்தர், ரோகிணி ரமேஷ், மஞ்சுளா வெயில் முத்து, காங்கிரஸ் நிர்வாகி சிவகுருநாதன், மீனாட்சி சுந்தரம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


