காரைக்குடி, ஜூன் 26: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே புதுவயல் பெருமாள் கோயில் பகுதியை சேர்ந்த கண்ணன் மனைவி நாகலட்சுமி (51). இவர், நேற்று காலை புதுவயல் இரட்டை பிள்ளையார் கோவில் ஊரணி அருகே நடைபயிற்சி சென்றார். அப்போது சாலையில் தங்கச் சங்கிலி ஒன்று அறுந்து கிடந்துள்ளது. அதனை எடுத்து பார்த்த போது தாலியுடன் கூடிய தங்க சங்கிலி என தெரியவந்தது.
உடனடியாக அதனை எடுத்து அவரது மகளுடன் சாக்கோட்டை காவல் ஆய்வாளர் மகேஸ்வரியிடம் 4 சவரன் தங்கச் சங்கிலியை ஒப்படைத்தார். அவரை காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்கள் பாராட்டினர். தாலியுடன் தங்கச்சங்கிலி காணவில்லை என யாரும் இதுவரை புகார் அளிக்கவில்லை. அதனால் தாலியுடன் தங்க சங்கிலியை பறிகொடுத்தவர் உரிய ஆவணங்களுடன் காவல் நிலையம் சென்றால் அவர்களிடம் தங்கச் சங்கிலி ஒப்படைக்கப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.


