சாத்தூரில் கண்மாய்களை தூர்வார விவசாயிகள் கோரிக்கை
சாத்தூர், டிச. 8: சாத்தூர் பகுதியில் அதிகளவில் பாசன கண்மாய்கள், ஊரணிகள் உள்ளன.
இதில் 100 ஏக்கருக்கும் மேல் பாசன வசதி கொண்ட கண்மாய்கள் பொதுப்பணி துறை கட்டுப்பாட்டிலும், அதற்கு கீழ் பாசனம் உள்ள சிறு கண்மாய்கள் மற்றும் ஊரணிகள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் பராமரிப்பிலும் இருந்து வருகின்றன. சிறு பாசன கண்மாய்கள், பொதுப்பணி துறைக்கு சொந்தமான ராமலிங்காபுரம், வேண்டாங்குளம், நீராவிபட்டி ஆகிய கண்மாய்கள் குடிமராமரத்து செய்ய கடந்த அதிமுக ஆட்சியின் போது ரூ.பல லட்சம் ஒதுக்கீடு செய்து பணிகள் பெயரளவில் நடந்தன.
ஆக்கிரமிப்புகளை அகற்றி முறையாக தூர்வாரப்படாததால் மண்மேவி கிடக்கிறது. மேலும் கண்மாய் உள்பகுதியில் செடி, கொடிகள், முள்செடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. இதனால் தண்ணீர் தேக்கி வைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து கண்மாய்களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.