விருதுநகர், ஜூன் 18: விருதுநகரில் கடந்த சில தினங்களாக கடும் வெப்பம் நிலவி வந்த நிலையில், நேற்று இரவு அரை மணி நேரம் கொட்டி தீர்த்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
விருதுநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக கடும் வெப்பம் நிலவி வந்தது. இந்தநிலையில் நேற்று இரவு 7 மணிக்கு தொடங்கிய கனமழையானது, இடி மின்னலுடன் சுமார் அரை மணி நேரம் பெய்தது.
இதனால் விருதுநகர் பழைய பேருந்து நிலையம், மதுரை சாலை டிடிகே சாலை, கிருஷ்ணமாச்சாரி சாலை, பாவாலி சாலை, புல்லலகோட்டை சாலை, புழுகணூரணி சாலை, கச்சேரி ரோடு முதலான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. சில இடங்களில் வாறுகால் நிரம்பி சாலைகளில் கழிவு நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு கனமழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவியதை அடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


