சிவகாசி, ஆக.19: மத்திய மக்கள் தொடர்பு தமிழ்நாடு, புதுச்சேரி மண்டலம் இயக்குநர் காமராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படக்கூடிய சென்னை மண்டல மத்திய மக்கள் தொடர்பகம் சார்பாக \”வளர்ச்சி அடைந்த பாரதம் - கிராமப்புற வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உத்தரவாத திட்டம், போதைப் பொருள் ஒழிப்பு பாரத இயக்கம் உள்ளிட்ட ஒன்றிய அரசின் மக்கள் நலத் திட்டங்கள்\” குறித்த 3 நாள் விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் பயனாளிகள் பதிவு முகாம் சிவகாசி, சாத்தூர் ரோட்டில் அமைந்திருக்கும் கம்மவார் திருமண மண்டபத்தில் இன்று முதல் நடைபெறுகிறது.
இந்த முகாமில் ஒன்றிய அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்த 40 முதல் 50 வரையிலான விளம்பர பதாகைகள் வைக்கப்படும். மேலும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், மாவட்ட சமூக நல அலுவலகம், அஞ்சல் துறை, மாவட்ட முன்னோடி வங்கி, ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி, மத்திய காலனி பயிற்சி நிறுவனம் மற்றும் பொது சேவை மையம் ஆகிய துறைகளின் ஸ்டால்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அஞ்சல் துறை மூலம் ஆதார் திருத்தம், பொது சேவை மையம் மூலமாக தீப்பெட்டி, பட்டாசு மற்றும் பிரிண்டிங் தொழிலாளர்களுக்கான நல வாரிய பதிவுகள் மற்றும் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி சம்பந்தப்பட்ட சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தல் உள்ளிட்ட பணிகள் இந்த ஸ்டால்கள் மூலம் மேற்கொள்ளப்படும். இந்நிகழ்வினை பொதுமக்கள் பார்வையிடவும் மற்றும் பங்கேற்கவும் இந்நிகழ்ச்சி குறித்த விளம்பர வாகன வண்டி சிவகாசியை சுற்றி மூன்று நாட்கள் வலம் வரும். இந்நிகழ்வினை கல்லூரி மாணவர்கள் பார்வையிட பல்வேறு கல்லூரிகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
மூன்று நாட்களும் காலை மற்றும் மதியம் என இரண்டு அமர்வுகள் நடைபெறும். ஒவ்வொரு அமர்விலும் கருத்தரங்கு இடம்பெறும். இக்கருத்தரங்கில் அரசு துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் பங்கு பெற்று பல்வேறு திட்டங்களை நிகழ்ச்சியில் பங்கபெறுபவர்களுக்கு எடுத்துரைப்பர். பின்பு பேச்சாளர்கள் பேசக்கூடிய கருத்துக்கள் ஒட்டிய கேள்வி பதில் மாணவர்களிடம் கேட்கப்பட்டு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்படும் என்றார்.



