அருப்புக்கோட்டை, ஆக.19: அருப்புக்கோட்டை அருகே கணவருடன் டூவீலரில் சென்ற மனைவி தவறி விழுந்து உயிரிழந்தார். சிவகாசி சாட்சியாபுரம் ஆசாரி காலனியை சேர்ந்தவர் சரவணக்குமார். இவரது மனைவி சாந்தி(40). சரவணகுமார் டிராக்டர் டிரைவராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் சரவணக்குமார் தனது மனைவி மற்றும் மகளுடன் இருசக்கர வாகனத்தில் மடப்புரம் காளியம்மன் கோவிலுக்கு சென்று விட்டு மீண்டும் அருப்புக்கோட்டை வழியாக ஊர் திரும்பி கொண்டிருந்தார்.
அருப்புக்கோட்டை விருதுநகர் புறவழிச்சாலை ராமசாமிபுரம் ரவுண்டானா அருகே வந்தபோது இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்திருந்த சாந்தி திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்தார். இதனை அடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து அருப்புக்கோட்டை டவுன் போலீசார் இருசக்கர வாகனத்தை அஜாக்கிரதையாக ஓட்டிச் சென்ற சாந்தியின் கணவர் சரவணக்குமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



