திருச்சுழி: திருச்சுழி அருகே சலுக்குவார்பட்டியில் அய்யனார் கோயிலில் ஐந்தாண்டுக்கு ஒருமுறை புரவி எடுப்பு திருவிழா நடைபெறும். இதன்படி இந்த கோயிலில் நேற்று முன் தினம் புரவி எடுப்பு திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதையடுத்து அய்யனார், கருப்பசாமி மற்றும் இதர பரிவார தெய்வங்கள் புதியதாக உருவாக்கப்பட்டன. பின்னர் சிலைகளுக்கு வண்ணம் தீட்டி, அழகுபடுத்தி வழிபாட்டிற்கு தயார்படுத்தப்பட்டன.
இந்நிலையில் நேற்று முன் தினம் நடந்த விழாவில், அய்யனார், கருப்பசாமி புரவி சிலைகள் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக மேளதாளம் முழங்க எடுத்து வரப்பட்டன. பின்னர் கோயிலை அடைந்தவுடன் சிலைகளுக்கு சிறப்புப் பூஜை மற்றும் மகா தீபாராதனை நடந்தது. இதில் சலுக்குவார்பட்டி மற்றும் சுற்றுப்பகுதியை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளைக் கிராம பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து செய்திருந்தனர். பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.



