திட்டக்குடி, பிப். 5: தமிழநாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் திமுக தான் வெல்லும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறினார். திட்டக்குடி சட்டமன்றத் தொகுதி திமுக சார்பில் ராமநத்தம் அடுத்த தொழுதூரில் தமிழ்நாடு தலைகுனியாது மாபெரும் பொதுக்கூட்டம் நடந்தது. அமைச்சரும், கடலூர் மேற்கு மாவட்ட செயலாளருமான சி.வெ.கணேசன் தலைமை தாங்கினார். மங்களூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பட்டூர் அமிர்தலிங்கம் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக வனம் மற்றும வன கிராம தொழில் துறை அமைச்சர் கண்ணப்பன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
தொடர்ந்து அமைச்சர் சி.வெ.கணேசன் பேசுகையில், தமிழ்நாட்டின் முதலமைச்சராக முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் வந்த பிறகு தான் திட்டக்குடி மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும் வெலிங்டன் நீர்த்தேக்கத்திற்கு சுமார் ரூ.130 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். தற்போது அந்த பணியும் நடைபெற்று வருகிறது. திட்டக்குடி சட்டமன்ற தொகுதியில் பல்வேறு கிராமங்களுக்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இத்தொகுதியில் உள்ள 3 ஆயிரத்து 500 விதவை பெண்களுக்கு இலவசமாக தையல் மெஷின் வழங்கப்பட்டுள்ளது. மேலும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு, ஏறத்தாழ 3 லட்சம் பேருக்கு வேலை பெற்று கொடுத்தது நமது முதல்வர் மு.க.ஸ்டாலின் தான். விடியல் பயணம், இல்லம் தேடி மருத்துவம், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார், என்றார்.
அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசுகையில், திட்டக்குடி தொகுதி மிக சிறப்பான தொகுதி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளார். ஒன்றிய பட்ஜெட் அறிவித்ததில் ஏதாவது பிரயோஜனம் இருக்கா, ஏழை, எளிய மக்களுக்கு ஏதாவது பிரயோஜனம் உள்ளதா எதுவும் கிடையாது. தற்போது ஆண்களை காட்டிலும் பெண்கள் அதிக அளவில் தலைமை செயலகத்தில் வேலை செய்து வருகின்றனர். 200 தொகுதிகள் இல்லை, 234 தொகுதிகளிலும் நாங்கள் தான் வெல்வோம். கடைசியாக 234 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மீண்டும் வெற்றி பெற செய்யுங்கள், என்றார். இதில் கடலூர் மேற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர் அணி அமைப்பாளர் ராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.


