புதுச்சேரி, பிப். 5: புதுவை ரெட்டியார்பாளையம் உதவி ஆய்வாளர் கலைச்செல்வன் மற்றும் போலீசார், நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். பாவாணர் நகர் பகுதியில் ரோந்து சென்றபோது, அங்கு கத்தியுடன் ஒருவர் பொதுமக்களை மிரட்டிக்கொண்டிருந்ததை கண்டனர். அப்போது போலீசாரை பார்த்ததும் அந்த நபர் தப்பியோட முயன்றார். போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தியபோது, பூமியான்பேட்டையை சேர்ந்த முருகன் (31) என்பது தெரியவந்தது. இதனையடுத்து முருகனை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து கத்தியை பறிமுதல் செய்தனர். இதேபோல் ரெட்டியார்பாளையம் உதவி ஆய்வாளர் ரவிவர்மன் மற்றும் போலீசார், ரோந்து பணியில் இருந்தபோது பூமியான்பேட்டை மதுபானக்கடை அருகே ஒருவர் கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டிக்கொண்டிருப்பதாக தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று அவரை பிடித்து விசாரித்தபோது, பூமியான்பேட்டை பாவாணர் நகரை சேர்ந்த செல்வத்தின் மகன் மாதேஷ் (எ) குட்டிகாக்கா (19) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் அவரை கைது செய்து கத்தியை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 2 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
+



