பல்வேறு வழக்குகளில் கைப்பற்றப்பட்டவை 3 ஆயிரம் கிலோ குட்கா பொருட்கள் எஸ்.பி. முன்னிலையில் தீவைத்து அழிப்பு
திருக்கோவிலூர், மார்ச் 3: திருக்கோவிலூர் அடுத்த அரகண்டநல்லூர் பகுதியில் பல்வேறு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட போதை பொருட்களை மாவட்ட கண்காணிப்பாளர் முன்னிலையில் தீவைத்து அழிக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த அரகண்டநல்லூர் பேரூராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் அரகண்டநல்லூர், திருவெண்ணெய்நல்லூர், காணை ஆகிய பகுதிகளில் பல்வேறு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட போதை பொருட்களான ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட பொருட்களை திருவெண்ணெய்நல்லூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற உத்தரவின்படி விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் பிரணித், துணை காவல் கண்காணிப்பாளர் ரவீந்திரகுப்தா ஆகியோர் மேற்பார்வையில் அரகண்டநல்லூர் காவல் ஆய்வாளர் சங்கர், திருவெண்ணெய்நல்லூர் காவல் ஆய்வாளர் அழகிரி, காணை காவல் நிலைய ஆய்வாளர் இளையராஜா ஆகியோர் சுமார் 3,000 கிலோ குட்காவை பொக்லைன் இயந்திரம் மூலம் பெரிய அளவிலான பள்ளம் தோண்டி அதில் கொட்டி தீவைத்து அழிக்கப்பட்டன.
