பண்ருட்டி, மே 20: பண்ருட்டி அருகே குளக்கரை குட்டையில் 2 சிறுவர்கள் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் வல்லம் அருகே உள்ள நடுமேட்டுக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஞானவேல். இவரது மகன் ஹரிதரன்(8). இவனும் பக்கத்து வீட்டை சேர்ந்த சபரிநாதன் மகன் சபரீஸ்வரன்(7) என்பவனும் நண்பர்கள். இவர்கள் இருவரும் நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தனர். இதையடுத்து சிறுவர்களை தேடி இவர்களின் பெற்றோர் வீட்டின் வெளியில் வந்துள்ளனர். அப்போது விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் இருவரும் காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுவர்களை பல இடங்களில் தேடினர்.
ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.இதற்கிடையில் நடுமேட்டுக்குப்பம் குபேரன் குளக்கரையில் உள்ள குட்டையில் 2 சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கிய நிலையில் கிடப்பதாக அவ்வழியாக சென்றவர்கள் கூறியதையடுத்து, அங்கு சென்று பார்த்தபோது, ஹரிதரன், சபரீஸ்வரன் ஆகியோர் குட்டை நீரில் மூழ்கிய நிலையில் கிடந்துள்ளனர். தொடர்ந்து சிறுவர்களை மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த தகவலின் பேரில், காடாம்புலியூர் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


