புவனகிரி, மே 19: சிதம்பரத்தில் இருந்து பரங்கிப்பேட்டைக்கு அரசு நகர பேருந்து நேற்று புறப்பட்டு சென்றது. இந்த பேருந்தில் 35 பயணிகள் இருந்தனர். பேருந்தை தற்காலிக டிரைவர் கனல் அமுதன்(37) ஓட்டிச் சென்றார். பு.முட்லூருக்கும் அகரம் ரயில்வே கேட்டுக்கும் இடையில் பேருந்து சென்றபோது சாலையில் நின்று கொண்டிருந்த ஒரு லாரியை பேருந்து டிரைவர் முந்திச் செல்ல முயன்றார். அப்போது எதிரே திடீரென ஒரு கார் வந்ததால், அரசு பஸ் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த வாய்க்காலில் இறங்கியது.
இதில் பேருந்தில் பயணம் செய்த 35 பயணிகளும் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதையடுத்து பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் ஆகியோர் விபத்துக்குள்ளான பேருந்தில் இருந்த பயணிகளை இறக்கி மாற்று பேருந்து மூலம் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து சம்பவம் குறித்து பரங்கிப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


