சின்னசேலம், ஆக. 10: சின்னசேலம் அருகே பங்காரம் காட்டுகொட்டாய் பகுதியை சேர்ந்தவர் காசி மகன் ராஜிவ்காந்தி (40). திருமணமானவர். விவசாய கூலித்தொழிலாளி. இவர் தன் மனைவி கனகா மற்றும் பிள்ளைகளுடன் அதே பகுதியில் வசித்து வந்தார். இந்நிலையில் ராஜீவ்காந்தி கடந்த 6ம் தேதி மாலை சுமார் 5 மணியளவில் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது வயல்வெளி சாலையில் இருந்து பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் அவரின் கழுத்து, இடுப்பு உள்ளிட்ட இடங்களில் கத்தியால் குத்தியுள்ளனர். அப்போது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்துள்ளனர். அவர்கள் வருவதை கண்ட மர்ம நபர்கள் பைக்கில் தப்பிச்சென்று விட்டனர்.
இதையடுத்து அவருடைய உறவினர்கள் ராஜிவ்காந்தியை தூக்கி சென்று கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து தகவலறிந்த சின்னசேலம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கள்ளக்குறிச்சி காவல் துணை கண்காணிப்பாளர் கலையரசன் உத்தரவின் பேரில் சின்னசேலம் இன்ஸ்பெக்டர் ஜோசப் செல்வராஜ், சப்-இன்ஸ்பெக்டர் மணிமேகலை ஆகியோர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர். மேலும் செல்போன் எண்களையும் ஆய்வு செய்து வந்தனர்.
இதையடுத்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், ராஜிவ்காந்தியின் மனைவி கனகா தனது கள்ளக்காதலனும், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான தனபால் (53) மற்றும் 2 அடியாட்களுடன் சேர்ந்து அவரை கொலை முயற்சி செய்தது தெரியவந்தது. இதையடுத்து முன்னாள் தலைவர் தனபால், காயம்பட்டவரின் மனைவி கனகா, அடியாட்கள் கள்ளக்குறிச்சி ஏமப்பேர் பகுதியை சேர்ந்த பால்ராஜ் (24), கார்த்திக் ஆகிய 4 பேர் மீது சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிந்து தனபால், கனகா, பால்ராஜ் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய கார்த்திக்கை தேடி வருகின்றனர்.



