சேத்தியாத்தோப்பு அருகே பூதங்குடி கிராமத்தில் சுடுகாட்டுக்கு பாதை இல்லாததால் இறந்தவரை வயல்வெளியில் தூக்கி செல்லும் அவலம்
சேத்தியாத்தோப்பு, ஜூலை 8: சுடுகாட்டுக்கு பாதை இல்லாததால் விஷஜந்து கடித்து இறந்த சிறுவனின் உடலை வயல்வெளியில் தூக்கி சென்று அடக்கம் செய்யப்பட்டது. கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே பூதங்குடி கிராமத்தில் ஆதிதிராவிட மக்களுக்கான சுடுகாட்டுக்கான பாதை வசதி என்பது இல்லை. இதனால் கிராமத்தில் யாரேனும் இறந்தால் அவர்களை பட்டா இடத்தின் வழியாக வயல்வெளியில் சேரும் சகதியுமான உள்ள வயலில் இறங்கி சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று நல்லடக்கம் செய்து வருகின்றனர். கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நிலையில் இறந்தவர்கள் உடலை அடக்கம் செய்து வருகின்றனர்.
தங்களுக்கு சுடுகாடு செல்வதற்கான பாதை வசதி வேண்டும் என பலகட்ட போராட்டங்கள் நடத்தியும், வருவாய்த் துறையினரிடம் பலமுறை மனு கொடுக்கும் போதெல்லாம் செய்து தருகிறோம், பாதை அமைத்து தர நடவடிக்கை எடுக்கிறோம் என்று கூறுகிறார்களே தவிர இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறுகின்றனர். எனவே சுடுகாட்டுக்கான பாதையை விரவில் அமைத்து தர கோரிக்கை வலுத்து வருகிறது. இக்கிராமத்தில் விஷஜந்து கடித்ததால் இறந்த மோஷிக் என்ற 12 வயது சிறுவனின் உடலை சேரும் சகதியுமான நெல் நடவு வயலின் வழியாக தூக்கிச் சென்று தகனம் செய்தனர். உடனடியாக அதிகாரிகள் தங்களுக்கு நிரந்தர தீர்வாக சுடுகாட்டுக்கு பாதை அமைத்து தர வேண்டும் எனவும் கிராம மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
