திருவெணெய்நல்லூர், ஜூலை 8: திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சியில் கட்டிடம் கட்டுவதற்கு அனுமதி பெற ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பேரூராட்சி இளநிலை உதவியாளரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள பெரியசெவலை கிராமத்தைச் சேர்ந்த சீனுவாசன் மகன் காவியவேந்தன். மருத்துவரான இவர் பெரியசெவலையில் மருத்துவமனை வைத்து நடத்தி வருகிறார். இவர் திருவெண்ணெய்நல்லூர் பாலாஜி கார்டனில் மருத்துவமனை, வணிக வளாக கட்டிடம் கட்டி வருகிறார். இந்தக் கட்டிடம் கட்டுவதற்கு அனுமதி பெற ரூ.1.30 லட்சம் செலுத்தி திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சி அலுவலகத்தில் விண்ணப்பம் செய்துள்ளார்.
இது தொடர்பாக திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சி இளநிலை உதவியாளர் பாலமுருகனை நேரில் சந்தித்து கேட்டபோது வணிக வளாக கட்டிடத்துக்கு அனுமதி பெற ரூ.15 ஆயிரம் லஞ்சம் தருமாறு கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத காவியவேந்தன் இதுகுறித்து விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு புகார் செய்தார். பின்னர் போலீசார் ஆலோசனைப்படி, காவியவேந்தன் ரசாயனப்பொடி தடவிய ரூ.15 ஆயிரத்தை திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளர் பாலமுருகனிடம் நேற்று கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், துணை சூப்பிரண்டு சரவணன், லஞ்ச ஒழிப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர் ஈஸ்வரி இளநிலை உதவியாளர் பாலமுருகனை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
