மயிலம், மே 6: கூலித் தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து 16 சவரன் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டிவனம் அடுத்த மயிலம், ஒத்தவாடை தெருவை சேர்ந்தவர் பொன்னி (55). இவரது கணவர் ஜெயபால் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் பொன்னி தனது வீட்டில் தனிமையில் வசித்து வருகின்றார். இவர் தினமும் காலையில் வீட்டை பூட்டிவிட்டு கூலி வேலைக்கு செல்வது வழக்கம். இதேபோன்று நேற்று காலை 8 மணி அளவில் வீட்டை பூட்டிவிட்டு அதே கிராமத்தில் கூலி வேலைக்கு சென்றுள்ளார்.
வேலை முடிந்து முற்பகல் 2 மணி அளவில் வீட்டிற்கு வந்த பொன்னி வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டின் உள்ளே அறையில் இருந்த பீரோவில் வைக்கப்பட்டிருந்த 16 பவுன் மற்றும் ரூ.90 ஆயிரம் ரொக்க பணமும் காணாமல் போனது தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக அதே பகுதியில் செண்டூர் சாலையில் வசிக்கும் அவரது மகன் மணி, கொள்ளை சம்பவம் குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மயிலம் போலீசார் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களை வரவழைத்து கொள்ளை நடந்த வீட்டில் சோதனை செய்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



