எம்பிபிஎஸ் மாணவர்களிடம் கர்நாடகா வாலிபர் ரூ.16 லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீசில் புகார் அர்மேனியா நாட்டில் கல்வி கட்டணம் செலுத்தாமல்
வேலூர், டிச.27: அர்மேனியா நாட்டில் எம்பிபிஎஸ் படிக்கும் மாணவர்களிடம் ரூ.16 லட்சம் மோசடி செய்த கர்நாடக மாநில வாலிபர் மீது சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம் காட்பாடியை சேர்ந்த வாலிபர் ஒருவர் அர்மேனியா நாட்டில் எம்பிபிஎஸ் படித்து வருகிறார். இவர் அந்த கல்லூரியில் தனக்கு தெரிந்த நபர்களை சேர்த்துள்ளார். இதற்கிடையே அங்கு படிக்க சென்ற கர்நாடக மாநிலம் கேஜிஎப் பகுதியை சேர்ந்த வாலிபருக்கும், அவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது இக்கல்லூரியில் நானும் பல மாணவர்களை சேர்த்து உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், உங்களுக்கு தெரிந்த நபர்கள் இருந்தால் என்னிடம் சொல்லுங்கள், அவர்களுக்கும் மருத்துவ சீட்டு வாங்கிக் கொடுத்துவிடலாம் என்று தெரிவித்துள்ளார். இதை நம்பிய காட்பாடி வாலிபரும் தனக்கு தெரிந்தவர்களை அவருக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
இதையடுத்து அந்த கர்நாடக வாலிபர், அர்மேனியாவில் மருத்துவம் படிக்க விரும்பிய நபர்களுக்கு சீட்டு வாங்கிக் கொடுத்துள்ளார். கல்லூரி கட்டணத்தையும் அவர்களிடமிருந்து பெற்றுள்ளார். ஆனால் அவர்களின் கல்லூரி கட்டணத்தை கேஜிஎப் நபர் செலுத்தவில்லையாம். பின்னர் கல்லூரி தரப்பில் இருந்து மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தை செலுத்துமாறு கடிதம் அனுப்பி உள்ளனர். அதன் பின்னரே கல்வி கட்டணம் செலுத்தாதது அந்த மாணவர்களுக்கு தெரியவந்ததுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவர்கள் காட்பாடி மாணவனிடம் தாங்கள் கொடுத்த பணத்தை அவரிடம் வாங்கித்தருமாறும் கேட்டுள்ளனர். இதையடுத்து அவரும் கர்நாடக வாலிபரிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர் சரியாக பதில் அளிக்கவில்லையாம். இதன் பின்னரே பல மாணவர்களிடம் ரூ.16 லட்சம் வரை மோசடி செய்தது காட்பாடி மாணவருக்கு தெரிவந்தது. இதுகுறித்து வேலூர் சைபர் கிரைம் போலீசில் காட்பாடி மாணவர் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


