வேலை வாங்கித் தருவதாக கூறி இன்ஸ்டாகிராம் தோழியிடம் ரூ.2 லட்சம் மோசடி: குடியாத்தம் வாலிபர் எஸ்பி அலுவலகத்தில் புகார்
வேலூர், ஆக.21: வேலை வாங்கித் தருவதாக கூறி இன்ஸ்டாகிராம் தோழியிடம் ரூ.2 லட்சம் இழந்ததாக குடியாத்தம் வாலிபர் வேலூர் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். வேலூர் எஸ்பி அலுவலகத்தில் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த பட்டதாரி வாலிபர் நேற்று புகார் அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: நான் பட்டப்படிப்பு முடித்துவிட்டு தற்போது விவசாயம் செய்து வருகிறேன். எனக்கு இன்ஸ்டாகிராம் மூலம் சென்னையைச் சேர்ந்த பெண் அறிமுகம் ஆனார். அவர் சென்னையில் ஓட்டல், சூப்பர் மார்க்கெட்டுகள், சலூன், ஆயில் தயாரிப்பு போன்ற பல்வேறு தொழில்கள் செய்து வருவதாகவும் கூறினார்.
மேலும் அந்தத் தொழில்கள் பற்றிய புகைப்படங்களை எனது செல்போனுக்கு அனுப்பி வைத்தார். அவரிடம் எனக்கு ஏதாவது வேலை வாங்கி தருமாறு கூறினேன். அதற்கு ரூ.5 லட்சம் செலவாகும் என அந்த பெண் கூறினார். இதையடுத்து நான் ஆன்லைனில் ரூ.1.80 லட்சம் அனுப்பி வைத்தேன். ஆனால் அவர் சொன்னபடி எனக்கு வேலை வாங்கித் தரவில்லை. இதனால் நான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டேன். அவர் திருப்பித் தர மறுக்கிறார்.
செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றபோது எனது நம்பரை செல்போனில் பிளாக் செய்து விட்டார். சென்னைக்கு நேரில் அவரது அலுவலகத்திற்கு சென்ற போது அங்கு அலுவலகம் மூடப்பட்டிருந்தது. செல்போனிலும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. எனது பணத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



