தனியார் கம்பெனி ஊழியர் ஓடும் பஸ்சில் திடீர் சாவு போலீசார் விசாரணை சேலத்தில் இருந்து வேலூருக்கு வந்தபோது
வேலூர், நவ.12: சேலத்தில் இருந்து வேலூர் வந்து கொண்டிருந்த பஸ்சில் தனியார் கம்பெனி ஊழியர் திடீரென உயிரிழந்தார். இதுகுறித்து வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்ட மொளசூர் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சிவா(39). கோவையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவர் நேற்று அதிகாலை 2 மணியளவில் சேலத்தில் இருந்து வேலூருக்கு புறப்பட்ட அரசு பஸ்சில் பயணித்தார். பஸ் காலை 7 மணியளவில் வேலூர் புதிய பஸ்நிலையத்திற்கு வந்தடைந்தது. பஸ்சில் இருந்த அனைத்து பயணிகளும் இறங்கிவிட்டார்கள். ஆனால் சிவா மட்டும் பஸ்சின் சீட்டில் அமர்ந்து தூங்கி கொண்டு இருப்பது போல் இருந்துள்ளார். இதை பார்த்த கண்டக்டர் அவரை தட்டி எழுப்பி உள்ளார்.
ஆனால் உடல் அசைவின்றி இருந்துள்ளது. இதுகுறித்து உடனடியாக 108 ஆம்புலன்ஸக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பஸ்சின் சீட்டில் இருந்த நபரை பரிசோதனை செய்தனர். அவர் ஓடும் பஸ்சில் ஏற்கனவே மாரடைப்பின் காரணமாக இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வந்து விசாரணை நடத்தினர். மேலும் இறந்த கிடந்த சிவா சடலத்தை கைப்பற்றி வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் வேலூர் புதிய பஸ்நிலையத்தில் நேற்று காலை சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.