வேலூர்- ஆற்காடு சாலையில் கெட்டுப்போன 20 கிலோ இறைச்சி, மீன் பறிமுதல் செய்து அழிப்பு: ரூ.50 ஆயிரம் அபராதம்
வேலூர், ஆக.5: வேலூர்- ஆற்காடு சாலையில் கெட்டுப்போன 20 கிலோ இறைச்சி மற்றும் மீன் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டு, ரூ.50ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. வேலூர் மாவட்ட கலெக்டர் லீலா அலெக்ஸ் உத்தரவின்பேரில், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் பிரபாகரன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்களான திவ்யா, காயத்ரி, கஸ்தூரி மற்றும் செல்வ விக்னேஷ் ஆகியோர் அடங்கிய உணவு பாதுகாப்புத்துறை குழுவினர், வேலூர்- ஆற்காடு சாலையில் உள்ள கடைகளில் நேற்று ஆய்வு செய்தனர். இதில், பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டிருந்த கெட்டுப்போன இறைச்சி சுமார் 20 கிலோ பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. அதேபோல் கெட்டுப்போன மீன் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.
மேலும் உணவு பொருட்களை உரிய முறையில் சேகரித்து வைத்து அதனை பயன்படுத்த வேண்டும் என ஓட்டல் உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது தவறும் பட்சத்தில் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டது. தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறையினர், வேலூர் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்களுடன் கூட்டு ஆய்வு செய்ததில் சுமார் 15 கிலோ அளவிலான அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்து ரூபாய் 50,000 அபராதம் விதித்தனர்.
அனைத்து உணவு வணிகர்களும் உணவு பாதுகாப்பு துறையின் உரிமம் அல்லது பதிவு சான்று பெற்று அதன் பின்னரே உணவு வணிகம் செய்ய வேண்டும் எனவும் தவறும் பட்சத்தில் ஒவ்வொரு கடைக்கும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரித்தனர். உணவு வணிகர்கள் தங்களது கடைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும். மீறினால் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரித்தனர்.
