Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

செயின் பறித்த வழக்கில் இருவருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை வேலூர் கோர்ட் உத்தரவு காட்பாடி கல்புதூரில் நடந்து சென்ற பெண்களிடம்

வேலூர், மார்ச் 4: காட்பாடியில் நடந்து சென்று கொண்டு இருந்த பெண்களிடம் செயின் பறித்த வழக்கில் இருவருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வேலூர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. காட்பாடி கல்புதூரைச் சேர்ந்தவர் ரமேஷ்குமார். இவர் மாநகராட்சி செயற்பொறியாளர். இவரது மனைவி கோமதி (43). இவர் கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ம் தேதி பகல் 12.30 மணியளவில் அந்த தெருவைச் சேர்ந்தவரின் வீட்டு சீமந்த விழாவிற்கு, அதே பகுதியைச் சேர்ந்த சாந்தா உட்பட 4 பேருடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே பைக்கில் வந்த 2 பேர் வந்துள்ளனர். அதில் பின்னாடி அமர்ந்து இருந்த ஒருவர் திடீரென கோமதி அணிந்திருந்த 5 சவரன் நகை மற்றும் சாந்தா அணிந்திருந்த 6 சவரன் தங்க செயின் என மொத்தம் 11 சவரன் பறித்துச் சென்றார்.

இதுகுறித்து காட்பாடி போலீசில் கோமதி புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, வழிப்பறியில் ஈடுபட்ட சென்னை கொருக்குபேட்டை இளையா என்கிற இளவரசன்(39) மற்றும் வேலூர் தோட்டப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சிவா என்கிற அந்ேதாணி (30) ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 3.50 சவரன் நகையை மீட்டனர். மீதி நகைகளை விற்றுவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த வழக்கு வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை மாவட்ட தலைமை நீதிபதி இளவரசன் விசாரித்தார். வழக்கில் அரசு வழிக்கறிஞர் மு.மு.பார்த்திபன் வாதாடினார். வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில் நீதிபதி நேற்று தீர்ப்பு வழங்கினார். அதில், குற்றம் சாட்டப்பட்ட இளவரசன் மற்றும் சிவா மீதான குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாகக் கூறி இவருக்கும் தலா 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இந்த இருவர் மீதும் வேலூர், சென்னை போன்ற பல்வேறு இடங்களில் கொலை, கொள்ளை, கொலை முயற்சி, வழிப்பறி போன்ற 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.