Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருவலம் இ.பி. கூட்ரோட்டில் இயங்கி வந்த டாஸ்மாக் கடை மூடப்பட்டது: பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்

திருவலம், ஜூன் 23: திருவலம் இ.பி. கூட்ரோட்டில் இயங்கி வந்த டாஸ்மாக் கடை தினகரன் செய்தி எதிரொலியால் மூடப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா திருவலம் பேரூராட்சியில் 15 வார்டுகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். பேரூராட்சிக்குட்பட்ட மேட்டுப்பாளையம் பகுதியில் டாஸ்மாக் கடை இயங்கி வந்தது. அவ்வாறு இயங்கி வந்த டாஸ்மாக் கடையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாவதாக தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து அந்த டாஸ்மாக் கடை கடந்த மே 13ம் தேதி மூடப்பட்டது. இதனால், பொதுமக்கள் நிம்மதியடைந்தனர்.

தொடர்ந்து குகையநெல்லூர் ஊராட்சிக்குட்பட்ட திருவலம் இ.பி. கூட்ரோடு பகுதியில் மற்றொரு டாஸ்மாக் கடை இயங்கி வந்தது. இந்த டாஸ்மாக் கடை உள்ள பகுதிக்கு அருகே தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகம், தேவாலயம், தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி போன்றவைகளுக்கு நாள்தோறும் திருவலம் மற்றும் சுற்றுப்புறங்களை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் வந்து செல்கின்றனர். அவ்வாறு பெற்றோர்கள் மாணவ, மாணவிகள் அவ்வழியாக வந்து செல்ல பல்வேறு சிரமங்களை அடைந்து வந்தனர்.

இந்நிலையில் பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் டாஸ்மாக் கடையை அப்பகுதியிலிருந்து வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என வேலூர் கலெக்டர் மற்றும் அதிகாரிகளுக்கு பல்வேறு கோரிக்கைகளையும், டாஸ்மாக் கடை முற்றுகை போராட்டங்களையும் நடத்தி வந்தனர். இதுகுறித்து இ.பி. கூட்ரோடு பகுதியில் இயங்கி வந்த டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.

இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட டாஸ்மாக் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து டாஸ்மாக் கடையை நேற்று முன்தினம் மூடி நடவடிக்கை மேற்கொண்டனர். இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். மேலும் இதுகுறித்து புகைப்படத்துடன் செய்தி வெளியிட்ட தினகரன் நாளிதழுக்கு நன்றி தெரிவித்தனர்.