Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

தரமற்ற 4,874 கிலோ விதைகள் விற்பனை செய்ய தடை

வேலூர், ஜூன் 11: வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் குறைகள் கண்டறியப்பட்ட ரூ.3 லட்சம் மதிப்பிலான 4,874 கிலோ தரமற்ற விதைகள் விற்பனை செய்ய தடை செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவ விதைப்புக்கு தேவையான விதைகள், அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் விதை விற்பனை நிலையங்கள் மற்றும் அரசு விரிவாக்க மையங்களில் பறக்கும் படை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதன்படி, கடந்த 8, 9ம் தேதிகளில், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் தருமபுரி விதை ஆய்வு துணை இயக்குநர் நாகராஜ் தலைமையில் விதை ஆய்வாளர்கள் கொண்ட குழுவினர் ஆய்வு செய்தனர்.

ஆய்வின்போது, வேலூர் விதை ஆய்வு துணை இயக்குநர் சுஜாதா மற்றும் விதை ஆய்வாளர்கள் உடனிருந்தனர். ஆய்வின் போது, விவசாயிகள் உரிமம் பெற்ற விதை விற்பனையாளர்களிடம் மட்டுமே ரசீது பெற்று விதைகளை வாங்கி பயன்படுத்த வேண்டுமெனவும், விதை விற்பனையாளர்கள் விதை விற்பனை உரிமம் பெறாமல் விதை விற்பனை செய்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தனியார் விதை விற்பனையாளர்கள் ரசீது இல்லாமல் விற்றாலோ, கூடுதல் விலைக்கு விற்பனை செய்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர்.

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் உள்ள 3 அரசு வேளாண்மை விரிவாக்க மையங்கள் மற்றும் 25 தனியார் விதை விற்பனை நிலையங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. விதைகளின் இருப்பினை சரியாக பராமரிக்காத விதை விற்பனை நிலையங்களில் ரூ.3,02,560 மதிப்புள்ள 4,874 கிலோ அளவிலான நெல் மற்றும் மக்காச்சோள விதைகளுக்கு விதை விற்பனை தடை விதிக்கப்பட்டது. மேலும், 38 விதை மாதிரிகள் முளைப்பு திறன் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக வேலூர் மண்டல விதை ஆய்வு துணை இயக்குநர் சுஜாதா தெரிவித்தார்.