Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஜோலார்பேட்டை அருகே பரபரப்பு; வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்துகொண்ட ஆட்டோ டிரைவர்

ஜோலார்பேட்டை, ஜூன் 11:ஜோலார்பேட்டை அருகே தனது மகள் தற்கொலை வழக்கில் சிறைக்கு சென்று ஜாமீனில் வெளிவந்தவர்கள் கொலை மிரட்டல் விடுத்த நிலையில், மன உளைச்சலில் ஆட்டோ டிரைவர் வீடியோ பதிவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த சக்கரகுப்பம், மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் தேவராஜ் என்பவரின் மகன் ரஜினி(41). ஆட்டோ டிரைவர். இவருக்கு கோமதி என்ற மனைவியும் 4 மகள், ஒரு மகன் உள்ளனர். இவர்களின் மகளான தர்ஷினி(15) என்பவர் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், கடந்த ஏப்ரல் 14ம் தேதி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில், தர்ஷினியின் தற்கொலைக்கு அதே பகுதியை சேர்ந்த ரேவதி, அவரது மகன் நித்தின்குமார், மகள் இலக்கியா, கணவர் செங்குட்டுவன் தான் காரணம் என தர்ஷினியின் தந்தை ரஜினி ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் செங்குட்டுவனை தவிர ரேவதி, நித்தின்குமார், இலக்கியா ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

இந்நிலையில் வெளியே சுற்றித்திரிந்த செங்குட்டுவன், தொடர்ந்து ரஜினி மற்றும் அவரது மகன் சந்தோஷ் ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ரஜினி ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை மேற்கொள்ளவில்லையாம். இதற்கிடையில் சிறையில் அடைக்கப்பட்ட 3 பேரும் ஜாமீனில் வெளிவந்த நிலையில், இவர்கள் அடிக்கடி உயிரிழந்த தர்ஷினியின் வீட்டுக்கு சென்று சந்தோஷ் மற்றும் அவரது தந்தை ரஜினியை ஆபாச வார்த்தைகளால் திட்டினார்களாம்.

மேலும், ‘உங்களால் என்ன செய்ய முடியும், நாங்கள் வெளியே வந்து விட்டோம், யாரும் எங்களை எதுவும் செய்ய முடியாது. அடுத்த சாவு நீதான்’ என கூறி கொலை மிரட்டல் விடுத்தார்களாம். இதனால் கடந்த சில நாட்களாக ஆட்டோ டிரைவர் ரஜினி மனவேதனையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று காலை செல்போனில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் என் சாவுக்கு செங்குட்டுவன் குடும்பத்தினரே காரணம் என கூறியுள்ளாராம். பின்னர் ரஜினி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து குடும்பத்தினர் ஜோலார்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ரஜினியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ரஜினி மனைவி கோமதி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் சடலத்தை கைப்பற்றியவுடன் வீடியோவில் பதிவு செய்த குற்றவாளிகள் எவரையும் குறிப்பிடாமல் ரஜினியின் சாவுக்கு மனஉளைச்சலும், கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறின் காரணமாகத்தான் ரஜினி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக குடும்பத்தாரிடம் போலீசார் எழுதி வாங்க முற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் உயிரிழந்த ரஜினி குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.தொடர்ந்து, சாவுக்கு யார் காரணம் என்பதை புகாரில் பதிவு செய்ய வேண்டும் என போலீசாரிடம் ரஜினியின் குடும்பத்தினர் கூறி கதறி அழுத சம்பவம் பார்ப்போரின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது. இருமாதத்திற்கு முன்பு மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், தந்தையும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.