Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மாஜி ராணுவ வீரர் மனைவிக்கு விபூதி பூசி நகை பறித்துச்சென்ற போலி சாமியார்கள் 4 ேபர் கைது

நாட்றம்பள்ளி, ஜூன் 11: திருவண்ணாமலை கோயிலில் இருந்து வருகிறோம் என கூறி மாஜி ராணுவ வீரர் மனைவிக்கு விபூதி பூசி நகை பறித்துச்சென்ற 4 போலி சாமியார்களை போலீசார் கைது செய்தனர். முக்கிய குற்றவாளியை வலைவீசி தேடி வருகின்றனர்.திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் சுண்டம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மகாலிங்கம்(45) ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவரது மனைவி அமுதா(43). இவர்களுக்கு 16 வயது மற்றும் 11 வயதில் 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 1ம் தேதி மகாலிங்கம் பணி நிமித்தமாக வெளியே சென்றிருந்தார். இதையறிந்து காரில் சாமியார் ேவடம் அணிந்து வந்த 4 பேர் திடீரென மகாலிங்கத்தின் வீட்டிற்குள் நுழைந்தனர்.

அப்போது வீட்டிற்குள் இருந்த அமுதாவிடம், நாங்கள் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இருந்து வருகிறோம். நீங்கள் குலதெய்வமாக அண்ணாமலையாரை வணங்கி வருகிறீர்கள், உங்கள் கணவர் ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார், உங்களின் 2 மகள்களில் ஒருவர் கண்டிப்பாக டாக்டராக வருவார். இதற்கு நீங்கள் பரிகாரம் செய்ய வேண்டும் என ஆசை வார்த்தை கூறினர்.இதனை நம்பிய அமுதா பரிகாரம் குறித்து கேட்டதற்கு, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் அன்னதானத்திற்கு ரூ.65 ஆயிரம் பணம் கொடுக்க வேண்டும், அவ்வாறு கொடுத்தால் நீங்கள் நினைப்பது நிறைவேறும் என போலி சாமியார் கும்பல் கூறியது. அதற்கு அமுதா தன்னிடம் பணம் இல்லை என தெரிவித்துள்ளார். உடனே போலி சாமியார்கள், நகையாக இருந்தால் கூட கொடுங்கள் என கேட்டுள்ளனர்.

அதற்கு சற்றும் பிடி கொடுக்காத அமுதாவின் நெற்றியில் திடீரென போலி சாமியார் கும்பல், தங்கள் மறைத்து வைத்திருந்த விபூதி போன்றவற்றை வைத்துள்ளனர். இதனால் சுயநினைவை இழந்த அமுதா, தான் அணிந்திருந்த 6 கிராம் கம்மலை கழற்றி கொடுத்துள்ளார். மேலும் அறையில் இருந்த தனது மகளை அழைத்து அவர் அணிந்திருந்த 2 கிராம் கம்மலையும் அமுதா கழற்றி போலி சாமியார் கும்பலிடம் கொடுத்துள்ளார். அதனை கைப்பற்றிய கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து காரில் தப்பிச் சென்றது.இதற்கிடையில் வெளியே சென்ற மகாலிங்கம் வீடு திரும்பியபோது, தனது மனைவி அமுதா சுயநினைவின்றி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். நினைவு திரும்பியதும் மகள் மற்றும் அமுதாவிடம் விசாரித்தபோது, மர்ம கும்பல் கைவரிசை காட்டியது தெரியவந்தது. இதுகுறித்து மகாலிங்கம் நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.

அதனடிப்படையில் நேற்று திருவண்ணாமலைக்கு விரைந்த போலீசார் குருவிமலை பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார்(54), டிரைவர் காசிநாதன்(53), மேகநாதன்(58), குமார்(62) உள்ளிட்ட 4 பேரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் 4 பேரும் நூதன முறையில் நகை மோசடியில் ஈடுபட்டதும், முக்கிய குற்றவாளியான ஜெயவேலு(65) என்பவர் தலைமறைவாக இருப்பதும் தெரியவந்தது.தொடர்ந்து 4 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ஒரு சவரன் தங்க நகை, சொகுசு காரை பறிமுதல் செய்தனர். மேலும் 4 பேரையும் திருப்பத்தூருக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கிளை சிறையில் அடைத்தனர். முக்கிய குற்றவாளியான ஜெயவேலுவை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் நாட்றம்பள்ளி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.