மணப்பாறை, ஆக. 5: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே 90 அடி ஆழ கிணற்றில் விழுந்து தத்தளித்த ஆட்டுக்குட்டியை நேற்று தீயணைப்புத்துறை வீரர்கள் பத்திரமாக மீட்டனர். மணப்பாறை அடுத்த திருநெல்லிபட்டி அருகேயுள்ள செல்லம்பட்டியை சேர்ந்தவர் அழகர் மனைவி ராஜாத்தி. இவர் கால்நடைகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் இவர் வளர்த்து ஆட்டுக்குட்டி அருகே இருந்த பிச்சை என்பவரது சுமார் 90 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்துள்ளது.
கிணற்றில் சுமார் 4 அடிக்கு தண்ணீர் இருந்த நிலையில் கிணற்றில் விழுந்த ஆட்டுக்குட்டி தண்ணீரில் தத்தளித்துள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற நிலைய அலுவலர்(பொ) ரமேஷ்குமார் தலைமையிலான மணப்பாறை தீயணைப்புத்துறை வீரர்கள், கயிறு கட்டி கிணற்றில் இறங்கி ஆட்டுக்குட்டியை பத்திரமாக மீட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர்.


