லால்குடி, ஆக.21: திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப்பணிகளை திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் தயாள் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ரெட்டிமாங்குடி மற்றும் பெருவளப்பூர் கிராமத்தில் மண்டல துணை வட்டாட்சியர் அலுவலகம், பேருந்து நிலையம், தூய்மை பாரதம் திட்டம் மூலம் நடைபெறும் பள்ளி கழிவறைகள், காணக்கிளியநல்லூர் ஊராட்சி சிறுவயலூரில் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் தயாரிக்கப்படும் பால் பண்ணை மற்றும் ஆவின் உணவு வகைகளை பார்வையிட்டார். கல்லக்குடி பேரூராட்சியில் இயங்கி வரும் டால்மியா சிமெண்ட் ஆலையில் பிளாஸ்டிக் கழிவுகளை எரிபொருளாக மாற்றி பயன்படுத்தப்படும் நிகழ்வினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் கோவண்டாகுறிச்சி ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் பிளாஸ்டிக் பொருட்கள் அரைத்து மூலம் தார் சாலை அமைப்பதற்காக உருவாக்கப்படும் மையத்தை பார்வையிட்டு பயன்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் தேவையான ஆலோசனைகள் கூறினார். மேலரசூர் ஊராட்சியில் நடைபெற்று வரும் பல்நோக்கு மைய கட்டிடத்தை பார்வையிட்டு விரைவில் பணிகளை முடிக்க உத்தரவிட்டார்.
கலெக்டருடன் புள்ளம்பாடி வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார், ஒன்றிய பொறியாளர் விமல்ராஜா, மேற்பார்வையாளர் சைமன்ராஜ், டால்மியா சிமெண்ட் செயல் இயக்குநர் விநாயகமூர்த்தி, உயர் அதிகாரி ரமேஷ்பாபு, கல்லக்குடி பேரூராட்சி தலைவர் பால்துரை, செயல் அலுவலர் அண்ணாதுரை, புள்ளம்பாடி பேரூராட்சி செயல் அலுவலர் ரமேஷ் உள்ளிட்ட அலுவலர்கள் உடன் இருந்தனர்.



