உடுமலை அருகே பஞ்சலிங்க அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை
உடுமலை, டிச.4: உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி மலையில் உள்ள பஞ்சலிங்க அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் பெஞ்சல் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தனர். மேலும், திருப்பூர் மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதன் காரணமாக பஞ்சலிங்க அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் அமணலிங்கேஸ்வரர் கோயிலுக்கு வந்த பக்தர்கள் பஞ்சலிங்க அருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். ஏராளமான பக்தர்கள் நேற்று திருமூர்த்தி மலைக்கு வந்திருந்தனர். அவர்கள் அமணலிங்கேஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்ய மட்டும் அனுமதிக்கப்பட்டனர். பாலாறு மற்றும் திருமூர்த்தி அணையில் குளிக்க அவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.