ஆரணி, ஆக.5: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி டவுன் அரசு மருத்துவமனை அருகில் உள்ள ஜி.எச்.சாலையின் நடுவில் நேற்று வாலிபர் ஒருவர் நின்று, கையில் கத்தியை வைத்துக்கொண்டு அவ்வழியாக மருத்துவமனை, அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு செல்லும் வாகனங்களை மடக்கி, பொதுமக்களை ஆபாசமாக பேசி திட்டி, நான்தான் பெரிய ரவுடி எனகூறி ரகளையில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதுகுறித்து பொதுமக்கள் ஆரணி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், டவுன் போலீஸ் எஸ்ஐ சந்திரசேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, வாலிபர் ஒருவர் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு செய்து, ரவுடி எனக்கூறி தகராறு செய்து வருவது தெரியவந்து.
இதனால், போலீசார் அவரை அங்கிருந்து செல்லுமாறு பலமுறை தெரிவித்தும், நீண்ட நேரம் செல்லாமல் அங்கேயே நின்று கொண்டு மீண்டும் தகராறு செய்து வந்ததால், போலீசார் அந்த நபரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில் ஆரணி அடுத்த இரும்பேடு கிராமம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த குமார்(34), என்பது தெரியவந்தது. உடனே, அவரை போலீசார் கைது செய்து, ஆரணி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

