Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

வெள்ளி பெரிய ரிஷப வாகனத்தில் அண்ணாமலையார் பவனி ஏராளமான பக்தர்கள் மாட வீதியில் திரண்டு தரிசனம் தீபத்திருவிழா 5ம் நாள் உற்சவம் கோலாகலம்

திருவண்ணாமலை, டிச.9: திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா வெகு விமரிசையாக நடந்து வருகிறது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் தீபத்திருவிழா உற்சவத்தின் 5ம் நாளான நேற்று காலை 10.45 மணியளவில், ராஜகோபுரம் எதிரில் உள்ள அலங்கார மண்டபத்தில் இருந்து மேளதாளம், சிவவாத்தியம் முழங்க காலை உற்சவம் தொடங்கியது.

அப்போது, வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகரும், கண்ணாடி ரிஷப வாகனத்தில் சந்திரசேகரரும் எழுந்தருளி, மாட வீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

தொடர்ந்து, இரவு 9 மணியளவில் இரவு உற்சவம் விமரிசையாக தொடங்கியது. திருக்கல்யாண மண்டபத்தில் அலங்காரம், தீபாராதனை முடிந்ததும், மூன்றாம் பிரகாரத்தை வலம் வந்து திட்டி வாசல் வழியாக ராஜகோபுரம் எதிரில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளினர். அப்போது, அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என பக்தி பரவசத்துடன் முழக்கமிட்டனர்.

அலங்கரிக்கப்பட்ட வெள்ளி ரிஷப வாகனத்தில் விநாயகரும், வெள்ளி மயில் வாகனத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியரும், வெள்ளி பெரிய ரிஷப வாகனத்தில் உண்ணாமுலை உடனாகிய அண்ணாமலையாரும், வெள்ளி ரிஷப வாகனத்தில் பராசக்தி அம்மனும், வெள்ளி ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரரும் எழுந்தருளி மாட வீதியில் பவனி வந்தனர். சுவாமி திருவீதியுலாவை தரிசிக்க டிசம்பர் மாத குளிரையும், பனிையயும் பொருட்படுத்தாமல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மாட வீதியில் திரண்டிருந்தனர்.