Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

‘நான் தான் அங்க சீப் கெஸ்ட்...’ போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்த தவெக பிரமுகர்: ‘ரீல்ஸ்’ எடுத்து அட்ராசிட்டி

தண்டராம்பட்டு, ஜூன் 29: போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்து தவெக நிர்வாகி ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டியில் ஈடுபட்ட சம்பவம் திருவண்ணாமலையில் வைரலாகி வருகிறது. நாடு முழுவதும் நேற்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடந்தது. இதையொட்டி ஆங்காங்கே அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்று குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கி முகாமை தொடங்கி வைத்தனர். இதேபோல் திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த தென்கரும்பலூர் ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் நேற்று போலியோ சொட்டு மருந்து முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிலையில் அதேபகுதியை சேர்ந்த தவெக பிரமுகர் நவாப் ஜான் நேற்று காலை தென்கரும்பலூர் அங்கன்வாடி மைய பொறுப்பாளரின் செல்போனுக்கு தொடர்புகொண்டு, ‘போலியோ சொட்டு மருந்து முகாமை நான் தான் தொடங்கி வைப்பேன்’ எனக்கூறியுள்ளார். அதன்பேரில் முகாமுக்கு தவெகவினர் புடைசூழ நவாப்ஜான் வந்தார். அங்கு குழந்தைகளுடன் பெற்றோர் காத்திருந்த நிலையில் வரிசையாக வரச்சொல்லி போலியோ சொட்டு மருந்தை வழங்கினார்.

இதனை அவரது ஆதரவாளர்கள் ரீல்ஸ் மற்றும் புகைப்படம் எடுத்து உடனடியாக சமூக வலைதளங்களில் வைரலாக்கினர். எவ்வித அரசு பதவியிலோ அல்லது மக்கள் பிரதிநிதியாகவோ இல்லாத நிலையில் தவெக பிரமுகர் ஒருவர் அழையா விருந்தாளியாக வந்து சொட்டு மருந்து விநியோகித்தது அங்கிருந்த பெற்றோர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.