Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தண்டராம்பட்டு அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு தரமற்ற உணவுகள் வழங்கிய ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ்: டாக்டர்கள் தகவல்

தண்டராம்பட்டு, ஜூன் 11: தண்டராம்பட்டு அரசு பொது மருத்துவமனையில் நோயாளிகளுக்கு தரமற்ற உணவுகள் வழங்கிய ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஊராட்சியில் அரசு பொது மருத்துவமனை 110 படுக்கைகளுடன் இயங்கி வருகிறது. இங்கு இரவு பகல் நேரங்களில் சுயாட்சி முறையில் டாக்டர்கள் பணி செய்து வருகின்றனர். செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமைகளில் குழந்தை பிறந்த தாய்மார்களுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்யப்படுகிறது. இங்கு தினசரி 50க்கும் மேற்பட்ட உள்நோயாளிகள் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு காலையில் இட்லி, சாம்பார், மதியம் சாப்பாடு- சாம்பார், ரசம், இரவு இட்லி-சாம்பார் வழங்கப்படுகிறது.

இந்நிலையில் காலையில் வழங்கப்படும் இட்லி நோயாளிகள் சாப்பிட முடியாமல் கடினமாகவும், புளிப்பு தன்மையுடனும் உள்ளதாக புகார் தெரிவித்து வருகின்றனர். இதனால் உடல் உபாதைகள் ஏற்படுவதாக வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் மத்திய சாப்பாடு சரியான முறையில் வேகாமல், சாம்பார் ரசம் போன்றும் வழங்கப்படுவதாக கூறுகின்றனர். இதனால் தரமற்ற உணவுகள் வழங்கப்படுவதாக நோயாளிகள் அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்து வருகின்றனர்.

அதன்படி ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து டாக்டர்களிடம் கேட்டபோது, ‘நோயாளிகளுக்கு சாப்பாடு விநியோகம் ஒப்பந்ததாரர் தரமற்ற உணவு வழங்குவதாக புகாரின்பேரில் இதுவரை 4 முறை நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் குறைந்த டெண்டரில் ஒப்பந்தம் செய்து வருகிறார். தரமற்ற உணவு வினியோகம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது காஸ் தட்டுப்பாடு உள்ளதால் அடுத்த மாதத்தில் புதியதாக காஸ் வாங்கி மருத்துவமனையில் உள்ள சமையல் கூடத்தில் சமையல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் உணவு தரமானதாக வழங்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுகிறது’ என்றனர்.