Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பருத்தி மூட்டை எடைபோடுவதில் தில்லுமுல்லு ரிமோட் மூலம் எடையை மாற்றி மோசடி

செங்கம், ஜூன் 9: செங்கம் அடுத்த முறையாறு கிராமத்தில் சாலையோரத்தில் தனி நபர்கள் பருத்தி மூட்டைகளை எடைபோட்டு விற்பனைக்கு வாங்குவது வழக்கம். இந்நிலையில் நேற்று காலை சாலையோரத்தில் அரட்டவாடி, பிஞ்சூர், கரியமங்கலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து பருத்தி மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

அப்போது தனி நபர்கள் பருத்தி மூட்டைகளை எடைபோடுவதில் முறைகேடு செய்கின்றனர். இதுகுறித்து உழவர் உரிமை இயக்கத்தின் மாநில செய்தித் தொடர்பாளர் க.விநாயகம் கூறியதாவது:

ஏற்கனவே தராசில் 461 கிலோ எடை போட்டு வைத்திருந்த பருத்தி மூட்டைகள், வியாபாரிகள் கொண்டு வந்த தராசில் 404 கிலோவாக மட்டுமே பதிவானது. இதன் மூலம் 57 கிலோ பருத்தி விவசாயிகளிடமிருந்து ஏமாற்றி திருடப்பட்டது கண்டறியப்பட்டது. இந்த எடை வைப்பதற்கு முன்பு இரண்டு முட்டைகள் மட்டும் சரி பார்த்தபோது எடை சரியாக இருந்துள்ளது. அதன் பிறகு விசாரித்தபோது வியாபாரிகள் கொண்டு வந்துள்ள தராசில் ரிமோட் மூலம் எடையை மாற்றும் வேலை செய்திருந்தது கண்டறியப்பட்டது.

இறுதியாக ஏமாற்றிய 57 கிலோ எடைக்கும் பணம் கொடுத்துவிட்டு சென்றனர். எனவே பருத்தி உள்ளிட்ட அனைத்து விளைபொருட்களையும் விற்பனை செய்யும் போது விவசாயிகள் ஒவ்வொரு மூட்டையின் எடையையும் நேரடியாக கண்காணித்து சரிபார்க்க வேண்டும். எடை மோசடிகள் குறித்து விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். மேலும் செங்கம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, அரசாங்கமே நேரடியாக பருத்தி கொள்முதல் செய்யும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் விவசாயிகளுக்கு நியாயமான விலையும், வெளிப்படையான எடை கணக்கீடும் உறுதி செய்யப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த சில நாட்களுக்கு முன் தினகரன் நாளிதழில் பருத்தி விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்படுகிறார்கள் எனவும், அரசு நெல் கொள் முதல் நிலையம் அமைத்தது போல் பருத்தி கொள்முதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் செய்தி வெளியானது. இதற்கிடையில் பருத்தி மூட்டை எடைபோடுவதில் தில்லுமுல்லு செய்வது வெளியானது குறிப்பிடத்தக்கது.