பள்ளிப்பட்டு, ஆக.21: ஆர்.கே.பேட்டை வட்டார கல்வி அலுவலகம் முன்பு 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் 20 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்.கே.பேட்டை வட்டார கல்வி அலுவலகம் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதில் 50க்கும் மேற்பட்ட ஆசிரியை மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்று கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதில் பழைய ஓய்வூதியம் மீண்டும் அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாடு களைந்து ஒன்றிய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். பதவி உயர்வை பாதிக்கும் அரசாணை 243 ரத்து செய்ய வேண்டும், டெட் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை நீக்க வேண்டும்,
பகுதிநேர ஆசிரியர்கள் மற்றும் சிறப்பாசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் கோடீஸ்வரி, லட்சுமி, ஐயப்பன், சரவணன், பாஸ்கர், முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



