ஊத்துக்கோட்டை, ஆக. 8: பெரியபாளையம் அடுத்த ஆரணி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இங்கு வியாபாரிகள், நெசவாளர்கள், விவசாயிகள், மாணவர்கள் என 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். மேலும், இங்கு காய்கறி, மளிகை, ஓட்டல்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இங்கு சேகரிக்கப்படும் குப்பைகளை பேரூராட்சி ஊழியர்கள் ஊருக்கு வெளியே உள்ள குப்பைக் கிடங்கில் கொட்டி வருகிறார்கள். அங்கு மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்கப்படுகிறது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக சரிவர குப்பைகளை தரம் பிரிக்காமல் கொட்டி விட்டு செல்கிறார்கள். இதனால் ஆடு, மாடு, நாய்கள் இந்த குப்பைகளை கலைத்து விடுகிறது. இதனால் குப்பைகள் ஆரணி பெரிய ஏரியிலிருந்து ஆரணியாற்றுக்கு உபரிநீர் செல்லும் கால்வாயில் தேங்கி கிடக்கிறது. மேலும் பெரியபாளையம் - புதுவாயல் சாலையிலும் குப்பைகள் சிதறிக் கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.



