Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

ஈகுவார்பாளையம் காப்புகாட்டில் அத்துமீறி நள்ளிரவில் ரசாயன கழிவுகள் தீவைத்து எரிப்பு: வனவிலங்குகள் பீதியில் கூச்சலிடும் பரிதாபம்

கும்மிடிப்பூண்டி, ஜூலை 31: ஈகுவார்பாளையம் காப்புக்காட்டில் அத்துமீறி நள்ளிரவில் ரசாயன கழிவுகள் தீவைத்து எரிப்பதால் வன விலங்குகள் பீதியில் கூச்சலிடுவது பரிதாபமாக உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காப்பு காட்டில் தீ வைத்து எரிப்பதை தடுக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன விலங்குகள் ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் மாதர்பாக்கம், எருக்குவாய், மணலி, கொள்ளனுர், நேமலூர், பல்லவாடா உள்ளிட்ட பகுதிகளில் காப்புக்காடுகள் உள்ளன. ஆயிரம் ஏக்கருக்கு மேல் பரப்பளவு கொண்ட காடுகளை வனத்துறை அதிகாரிகள் வனச்சரகர் மூலம் கண்காணித்து வருகின்றனர். இந்த காடுகளில் பல்வேறு அரிய வகை மரங்கள், வன விலங்குகள் பாம்புகள் உள்ளிட்ட 277 வகையான உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.

இந்த வனவிலங்குகளையும் மரங்களையும் பாதுகாக்க தமிழக அரசு ஆண்டுதோறும் நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை மேற்கொண்டு வருவதால் சுற்றுச்சூழல் பாதுகாப்பாக இருந்து வருகிறது. சில வனத்துறை அதிகாரிகள் காடுகளை அழிக்கும் வகையில், வனத்துறைக்கு சொந்தமான இடங்களை மற்றவர்கள் பயன்படுத்த மாத வாடகை வசூலித்து வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக தமிழக-ஆந்திர எல்லை ஒட்டியுள்ள  சிட்டி பகுதியில் எண்ணற்ற பாலிதீன் கழிவுகள் மற்றும் கெமிக்கல் கழிவுகளை கும்மிடிப்பூண்டி காட்டுப்பகுதி மற்றும் அதை ஒட்டி உள்ள சாலை ஓரங்களில் கொட்டப்படுகிறது. காப்புகாடுகளை ஒட்டியுள்ள பட்டா நிலத்தில் ரசாயன ரப்பர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை இரவு நேரங்களில் ஏரியூட்டுகின்றனர். இதுதொடர்பாக ஏற்கனவே பல்லவாடா பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் புகார் மனு கொடுத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஈகுவார்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 200 ஏக்கர் பரப்பளவு கொண்ட காப்புக்காட்டில் அனுமதி இல்லாமல் சிலர் ஆந்திர மாநிலத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட ரசாயன கழிவுகளை 20 அடி பள்ளம் தோண்டி வனத்துறை உதவியோடு இரவு நேரத்தில் எரியூட்டி அழிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து, நேற்று வாலிபர் ஒருவர் சிப்காட்டில் பணி முடித்துவிட்டு ஈகுவார்பாளையம் காப்புக்காடு வழியாக சென்றபோது வன விலங்குகள் அங்கும் இங்கும் இருந்ததை கண்டும் ஒரு இடத்தில் மள மளவென தீப்பிடித்து எரியும் காட்சியைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் புகை மூட்டம் சூழ்ந்தது. காடுகளில் இருந்த குரங்கு உள்ளிட்ட வன விலங்குகள் பீதியில் கூச்சலிட்டு அங்கும், இங்குமாக ஓடிக் கொண்டிருந்தது.

இதனைக் கண்ட வாலிபர் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இதைப் பார்த்த ஈகுவார்பாளையம் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு அலுவலர்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக மேற்கண்ட இடத்தை ஆய்வு செய்தனர். இச்சம்பம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஆந்திர மாநிலத்தில் இருந்து ரசாயன கழிவுகளை எரிக்கும் நபர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று மாவட்ட கலெக்டருக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கைவிடுக்கின்றனர்.