Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மாவட்டம் முழுவதும் 1493 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்

திருவள்ளூர், ஜூன் 29: திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் 1493 மையங்களில் போலியோ சொட்டு மருந்துவ சிறப்பு முகாம் நடைபெற்றது. இதனை கலெக்டர் கவிதா தொடங்கி வைத்தார். திருவள்ளூர் நகராட்சி, ஜெஎன் சாலையில் உள்ள, நகராட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் தேசிய போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாமினை மாவட்ட கலெக்டர் கவிதா தொடங்கி வைத்தார். பின்னர் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினார். அப்போது கலெக்டர் கூறியதாவது, போலியோ எனப்படும் இளம்பிள்ளை வாதநோயை அறவே ஒழிக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு, பிறந்த குழந்தை முதல் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் சுமார் 1,87,166 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் மூலம் வழங்கப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் 1493 மையங்களில் 0 முதல் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இப்பணிக்காக மொத்தம் 6127 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இம்முகாமினை பயன்படுத்தி போலியோ சொட்டு மருந்து அளித்து குழந்தைகளின் ஆரோக்கியத்தினை பாதுகாத்து, போலியோ இல்லாத நிலை உருவாக்க முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும். தமிழ்நாட்டில் 22 ஆண்டுகளாக போலியோ இல்லாத நிலை உள்ளது. இந்நிலையை தக்க வைத்துக் கொள்ளவும், குழந்தைகளை போலியோ வைரஸ் பாதிப்பில் இருந்து பாதுகாப்பதும் மிகவும் அவசியம். எனவே பெற்றோர்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி போலியோ நோய் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என கூறினார். இதில் மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் பா.பிரியா ராஜ், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் (பொ) டாக்டர் பொற்ச்செல்வி, பள்ளி தலைமை ஆசிரியர் முரளிதரன் உள்பட பலர் கலந்துக்கொண்டனர்.

திருவள்ளூர் நகராட்சி அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்ட முகாமில் நகர மன்ற தலைவர் உதயமலர் பாண்டியன் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினார். அப்போது முன்னாள் நகர மன்ற தலைவர் பொன் பாண்டியன், நகராட்சி கவுன்சிலர் தாமஸ் (எ) ராஜ்குமார், சுகாதார அலுவலர் மோகன், வருவாய் ஆய்வாளர் ஜெயசீலன் உள்பட பலர் உடன் இருந்தனர். இதேபோல் வெங்கத்தூர் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் காங்கிரஸ் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ஆர்.சசிகுமார் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினார்.