Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

பாசனத்திட்டங்களில் தண்ணீர் திருட்டை கண்டுகொள்ளாத அதிகாரிகள்

திருப்பூர், ஜூலை 31: திருப்பூர் மாவட்ட கலெக்டர் மனிஷ் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் கலந்துகொண்டு தங்கள் பகுதி சார்ந்த 120 கோரிக்கை மனுக்களாய் மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கினர். இக்கூட்டத்தில் கலந்துகொண்ட பெரும்பான்மையான விவசாயிகள், பிஏபி மற்றும் அமராவதி பாசன நீர் திட்டங்களில் தொடர்ந்து நடைபெறும் தண்ணீர் திருட்டு குறித்து கடுமையான அதிருப்தியை தெரிவித்தனர். இது தொடர்பாக நீர்வளத் துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித பயனுள்ள நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், கண் துடைப்பிற்காக சில இடங்களில் ஆய்வு மேற்கொண்டு குழாய் இணைப்புகளை துண்டித்துச் செல்வதோடு சரி, மீண்டும் தண்ணீர் திருடப்படுவதைக் கண்காணிக்க அதிகாரிகள் தவறிவிடுவதாகவும் குற்றம் சாட்டினர்.

மாவட்ட கலெக்டரே நேரடியாக ஆய்வு செய்து உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். விவசாயிகளின் புகார்களைத் தொடர்ந்து, தண்ணீர் திருட்டு தொடர்பாக சுழற்சி முறையில் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், நீர் திருட்டிற்குப் பயன்படுத்தப்படும் மின் மோட்டார்கள் மற்றும் நிலத்தடியில் பதிக்கப்பட்டுள்ள குழாய்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்றும் மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில் விவசாயிகள் விழிப்புணர்வு இயக்கம் சார்பில், உடுமலைப்பேட்டை அருகே பாதுகாப்பு விதிமுறைகளை மீறி அமைக்கப்பட்ட காற்றாலைகள் மற்றும் அதன் மின் இணைப்புகளை ரத்து செய்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

கீழ்பவானி பாசன விவசாயிகள் சங்கம் சார்பில், கீழ்பவானி அணைக்கு உடனடியாக உயிர் தண்ணீர் திறக்கப்பட வேண்டும், காவிரி தீர்ப்புப்படி நீர் நிர்வாகம் செய்யப்பட வேண்டும்.அரசியலமைப்புச் சட்டத்தை மதித்து கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும் மற்றும் நாள்தோறும் நீர் பங்கீடு செய்யும் அம்சத்தைக் காவிரி தீர்ப்பில் சேர்க்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது. பிஏபி வெள்ளகோவில் கிளை கால்வாய் நீர் பாதுகாப்பு சங்கம் சார்பில், வெள்ளகோவில் பகுதி பாசன விவகாரத்தில் கடந்த நான்கு மண்டல பாசனங்களின் முழு விவரங்கள் அடங்கிய வெள்ளை அறிக்கையை நீர்வளத் துறை உடனடியாக வெளியிட வேண்டும். பரம்பிக்குளம் பிரதான கால்வாயில் கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுக்க பாதுகாப்பு வேலிகள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மேலும், தெருநாய்கள் தாக்கி உயிரிழக்கும் கால்நடைகளுக்கு அவற்றின் சந்தை மதிப்பீட்டின் அடிப்படையில் 15 நாட்களுக்குள் நிரந்தர இழப்பீடு வழங்கும் நடைமுறையை அரசு உருவாக்க வேண்டும் என வலியுறுத்தினர். நல்லூர் முதலிபாளையம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழு சார்பில், முதலிபாளையம் மற்றும் நல்லூர் கல்குவாரி பகுதிகளில் பரவியுள்ள குப்பை மேடுகளிலிருந்து வெளியேறும் நச்சுக்கசிவு நீரால் நிலத்தடி நீர் மாசுபடுவதைத் தடுக்க, உயர் நீதிமன்ற உத்தரவுப்படி கல்குவாரிகளில் உள்ள குப்பைகளையும், கசிவு நீரையும் அறிவியல் பூர்வமாக அகற்றிட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மேலும், உடுமலை பகுதிகளில் பயிர்களைச் சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளைக் கட்டுப்படுத்த வனத்துறை கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும், நொய்யல் ஆற்றைப் பாதுகாத்து மீட்டெடுக்க தமிழக அரசு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய மாவட்ட நிர்வாகம் பரிந்துறை செய்ய வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தினர்.