Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருப்பூரில் வட்டார போக்குவரத்து அதிகாரி பணியிடம் நிரப்ப கோரிக்கை

பல்லடம், ஜூன் 25: திருப்பூரில் வட்டார போக்குவரத்து அதிகாரி பணியிடம் நிரப்ப வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து சமூக ஆர்வலர் பி.கிருஷ்ணசாமி முதல்வர் சி. ஜோசப் விஜய்க்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பூரில் வடக்கு மற்றும் தெற்கு என இரண்டு வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் உள்ளது. வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஆர்.டி.ஓ. ஜெயதேவ் கடந்த 2024ம் வருடம் இடமாறுதல் ஆனார். அதன் பிறகு தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பணியில் இருந்த ஆர்.டி.ஓ. வெங்கிடுசாமி இரண்டு வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களையும் கவனித்து வந்தார். புதிய மினி பஸ் திட்டத்தின் கீழ் 2025ம் வருடம் பல மினி பஸ்களுக்கு இடம்பெயர்வு அனுமதி வழங்கினார்.

இந்த திட்டத்தில் பல முறைகேடுகள் செய்ததால் ஆர்.டி.ஓ. வெங்கிடுசாமி 13.03.2025 அன்று திருச்சிக்கு இடமாறுதல் செய்யப்பட்டு பின்னர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார். அவர் தவறாக கொடுத்த பர்மிட்டுகளை வைத்துக் கொண்டு தவறாக ஓடும் மினி பஸ்களை முறைப்படுத்த வேண்டும்.

அவர் செய்த பல தவறுகளால் இரண்டு வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் பணிகள் முடங்கி கிடக்கிறது. அதற்குப் பிறகு இன்று வரை திருப்பூர் தெற்கு, திருப்பூர் வடக்கு ஆகிய இரண்டு வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கும் பொறுப்பு வட்டார போக்குவரத்து அலுவலர்கள் பணியில் இருக்கின்றார்கள்.

பொறுப்பு ஆர்.டி.ஓ.க்கள் தினசரி வர இயலாததால் அன்றாட வேலைகள் அனைத்தும் கிடப்பில் உள்ளது. ஆதலால் திருப்பூரில் உள்ள இரண்டு வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கும் நிரந்தரமான வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களை பணி நியமனம் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.