Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

திருப்பூரில் உருவ பொம்மையை எரித்ததால் பரபரப்பு; நீட் தேர்வை எதிர்த்து போராடிய 52 பேர் குண்டுக்கட்டாக கைது

திருப்பூர், ஜூலை 23: திருப்பூரில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உருவ பொம்மையை எரித்து தபால் நிலையம் முன்பு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட 52 பேரை குண்டுக்கட்டாக போலீசார் கைது செய்தனர். டெல்லியில் போராடி வரும் மாணவர்கள், இளைஞர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்தும், நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்யக்கோரியும், ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினர் திருப்பூர் ரயில் நிலையத்தில் இருந்து பேரணியாக தலைமை தபால் நிலைய அலுவலகத்தை முற்றுகையிட வந்தனர்.

அப்போது, ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உருவ பொம்மையை அணைத்து, அதனை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். பின்னர் மாணவர்கள் தொடர்ந்து ஊர்வலமாக வந்து, தலைமை தபால் நிலைய அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து சாலை மறியலிலும் ஈடுபட்டனர். அப்போது ஒன்றிய அரசை கண்டித்தும், ஒன்றிய அமைச்சர் பதவி விலக கோரியும் கோஷங்களை எழுப்பினர்.

மேலும் டெல்லியில் போராடும் மாணவர்களுக்காக சென்னையில் போராடிய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய தமிழக அரசை கண்டித்தும், தமிழக காவல்துறையை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் துணை கமிஷனர் ரமேஷ் கிருஷ்ணா, உதவி கமிஷனர் கணேசன் பிரதீப் குமார் மற்றும் வடக்கு போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லாத காரணத்தால், போலீசார் மாணவர்களை குண்டுக்கட்டாக தூக்கி வாகனத்தில் ஏற்றினர். மாணவர்கள் என்றும் பாராமல் போலீசார் அதிகார தோரணையில் ஒவ்வொரு மாணவனையும் சாலையில் தரதரவென இழுத்து சென்று வாகனத்தில் ஏற்றிய சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திஉள்ளது.