திருப்பூர், ஆக.5: அரசு பணியாளராக பணிபுரியும்போது ஏழை, எளிய மக்களுக்கு நேரடியாக சேவை செய்ய முடியும் என இலவச பயிற்சி வகுப்பினை தொடங்கி வைத்து கலெக்டர் மனிஷ் பேசினார். திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பினை மாவட்ட கலெக்டர் மனிஷ் துவக்கி வைத்து பேசியதாவது: போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் தொடர்ச்சியாக படிப்பது, திட்டமிடுவது, புத்தகங்களை படித்து குறிப்பு எடுப்பது. சக மாணவர்கள் குழுவாக கலந்துரையாடுவது போன்றவற்றை கடைபிடிப்பதன் மூலம் தேர்வுகளை எளிதாக எதிர் கொள்ளலாம். பயிற்சி பெறும் மாணவர்கள் அனைவரும் தொடர்ந்து மாதிரித் தேர்வுகளை எழுத வேண்டும்.
தேர்வுகளில் வெற்றி பெற்று அரசுப் பணியாளராக பணிபுரியும்போது ஏழை, எளிய மக்களுக்கு நேரடியாக சேவை செய்யும் வாய்ப்பினை பெறலாம். இந்த பயிற்சியில் மாதம் இருமுறை மாதிரித் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. தேர்வுக்கான இலவசப் பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்கள் பெயரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரிலோ அல்லது 0421 2999152, 94990 55944 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர் பேசினார். கோவை மண்டல இயக்குநர் (வேலைவாய்ப்பு) ஜோதிமணி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சுரேஷ், மாவட்ட திறன் அலுவலர் சரவணன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


