Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

குற்றாலம் சீசன் துவங்கி ஒரு மாதமான நிலையில் மெயினருவியில் கட்டப்பட்ட உடை மாற்றும் அறை திறக்கப்படாததால் பெண்கள் அவதி

தென்காசி, ஜூலை 6: குற்றாலம் மெயினருவியில் சுற்றுலாத்துறை சார்பில் உடை மாற்றும் அறை திறக்கப்படாததால் பெண்கள் அவதியடைந்து வருகின்றனர். இதனால் குளிக்க முடியாமல் பெண்கள் பலர் அருவியின் அழகை பார்த்து ரசித்து விட்டு திரும்பி செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சுற்றுலாத்துறை சார்பில் குற்றாலம் ஐந்தருவி, மெயினருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட பகுதியில் ரூ.11 கோடி செலவில் பல்வேறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் 90 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது. தரைதளம் மட்டுமே மெயினருவியில் அமைக்க வேண்டியுள்ளது. இந்நிலையில் குற்றாலம் சீசன் தொடங்கியதால் இப்பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

ஆனால் ஏற்கனவே முடித்த கட்டிடங்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை. குறிப்பாக, சீசன் தொடங்கி 1 மாதம் ஆன நிலையில் மெயினருவியில் பெண்களுக்கான உடை மாற்றும் அறை கட்டுமான பணிகள் முடிவடைந்த பிறகும் இன்றளவு வரை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை.தற்போது குற்றாலத்தில் சீசன் காரணமாக தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.அதிலும் விடுமுறை நாட்களான கடந்த 2 நாட்களாக குற்றாலம் மெயினருவிக்கு ஏராளமான பெண்கள் குளிக்க வருகை தருகின்றனர். அவ்வாறு குளிக்கும் பெண்கள் உடைமாற்றும் அறை திறக்கப்படாததால் திறந்த வெளியில் நின்று உடைமாற்றும் நிலை உள்ளது. இதனால் பல பெண்கள் சங்கடப்படுகின்றனர். ஒரு சிலர் குளிக்காமல் அருவியை பார்வையிட்டு திரும்பும் நிலையும் உள்ளது.

அனைவரது கையிலும் செல்போன்கள் உள்ள நிலையில் யாரேனும் தவறான நபர்கள் போட்டோ மற்றும் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து விடுவார்களோ என்ற அச்சம் காரணமாக பல பெண்கள் குளிக்காமல் அருவியின் அழகை மட்டும் பார்வையிட்டு திரும்பிச் செல்கின்றனர். மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு குற்றாலத்தில் நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்டார். அப்போது பணிகளை விரைந்து முடிக்கவும், கட்டிடங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தார். ஆனால் பெண்களுக்கான உடை மாற்று அறை திறக்கப்படாமல் வைத்திருப்பது பெண்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் மாவட்டம் நிர்வாகம் தலையிட்டு உடைமாற்றும் அறையை உடனடியாக திறக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.