ஆறுமுகநேரி, ஆக. 5: காயல்பட்டினத்தில் பெண்ணிடம் அரிவாளை காட்டி மிரட்டிய கட்டிட தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். காயல்பட்டினம், மங்களவிநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்த சம்சுதீன் மனைவி ரஹ்மத் பீவி (50). வீடுகளுக்கு சமையல் வேலைக்கு சென்று வருகிறார். இவருக்கு சொந்தமான வீட்டை 3 மாதங்களுக்கு முன்பு கைக்குழந்தையுடன் வந்த பானு என்பவருக்கு வாடகைக்கு கொடுத்தார்.
கடந்த 2ம் தேதி இரவு 9.45 மணிக்கு பானு வீட்டுக்கு வழக்கமாக வந்து செல்லும் காயல்பட்டினம், சிங்கிதுறையைச் சேர்ந்த முத்துலிங்கம் என்பவர், பானு மற்றும் அவரது குழந்தையை தாக்குவதாக ரஹ்மத் பீவிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு தமிழரசி என்பவருடன் விரைந்து சென்ற ரஹ்மத் பீவி, பானுவுக்காகத் தான் வீடு கொடுக்கப்பட்டு உள்ளது எனக்கூறி முத்துலிங்கத்தை தட்டிக் கேட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த முத்துலிங்கம், ரஹ்மத் பீவியிடம் அரிவாளைக் காட்டி அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்தார். மேலும் அவரது நண்பர் கசாலி என்பவரை அழைத்து வந்து மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து ரஹ்மத் பீவி ஆறுமுகநேரி போலீசில் புகார் செய்தார். எஸ்எஸ்ஐ கோயில்பிள்ளை வழக்கு பதிவு செய்தார். எஸ்ஐ இருதயராஜ் விசாரணை நடத்தி முத்துலிங்கத்தை கைது செய்து, ஸ்ரீவை. கிளைச் சிறையில் அடைத்தார். கசாலியை தேடி வருகின்றனர்.


