திருவாரூர், நவ. 13: கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய் துறை கிராம உதவியாளர் சங்கத்தினர் 90 பேர் கைது செய்யப்பட்டனர். அலுவலக உதவியாளருக்கு இணையான கிராம உதவியாளர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.15 ஆயிரத்து 700 வழங்க வேண்டும். கருணை அடிப்படையில் கிராம உதவியாளர்களுக்கு கல்வி தகுதி அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும்,
கிராம நிர்வாக அலுவலர்பணியிடத்திற்கு பதவி உயர்வு பெறுவதற்கு 10 ஆண்டு நிறைவு செய்திருக்க வேண்டும் என்பதை 6 ஆண்டுகளாக குறைக்க வேண்டும், வருவாய்த்துறையில் ஏற்படும் காலி பணியிடங்களில் 50 சதவித பணியிடத்தினை கிராம உதவியாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பதவி உயர்வு மூலம் நிரப்ப வேண்டும்,
இறந்த மற்றும் ஓய்வு பெற்ற கிராம உதவியாளர்களுக்கு பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் மறியலில் ஈடுபட்ட ஊழியர்களை தாலுகா போலீசார் கைது செய்து காட்டூரில் இருந்து வரும் திருமண மண்டபம் ஒன்றில் தங்க வைத்து பின்னர் விடுவித்தனர்.
