முத்துப்பேட்டை, ஜூன் 4: முத்துப்பேட்டை ஒன்றியம் தில்லைவிளாகம் கிழக்கு அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு பயின்ற மாணவர்கள் ரூ.25 ஆயிரம் மதிப்பில் பள்ளிக்கு பயன்படும் வகையிலான பொருள் வைப்பறை (லாக்கர்) வசதி கொண்ட பீரோ ஒன்றினை நேற்று அன்பளிப்பாக வழங்கினர். திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஒன்றியம் தில்லைவிளாகம் கிழக்கு அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் 170 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இங்கு பணியாற்றும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பான செயல்பாடுகளால் தனியார் பள்ளிக்கு நிகராக இருப்பதுடன் இப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளனர்.அதனால் கிராம மக்கள் மத்தியிலும் பெற்றோர்கள் மத்தியிலும் நன்கு வரவேற்பு பெற்று வருடத்திற்கு வருடம் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் இந்த பள்ளியில் 2025-2026ம் கல்வியாண்டில் எட்டாம் வகுப்பு பயின்ற மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் ரூ.25 ஆயிரம் மதிப்பில் பள்ளிக்கு பயன்படும் வகையிலான பொருள் வைப்பறை (லாக்கர்) வசதி கொண்ட பீரோ ஒன்றினை நேற்று அன்பளிப்பாக வழங்கினர். அதனை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்ட பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களை பாராட்டினர்.


